செய்திகள்

மலையென உயரும் பெட்ரோல், டீசல் விலை - காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselHike

ராமேஸ்வரம்:

இந்தியாவில் தினமும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், நிர்ணயிக்கப்படும் விலைகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர, விலை குறைக்கப்பட்டதாக வரலாறு கொஞ்சமே. இந்த சூழலில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாய் 24 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத இந்த விலை உயர்வை பலரும் எதிர்த்துவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறும் அவர்கள், விலை குறைக்கப்படும் வரையில், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. #PetrolDieselHike

SCROLL FOR NEXT