புதுடெல்லி:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 196 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவிலும் 500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முதல்கட்ட தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.