செய்திகள்

பாந்த்ரா ரெயில் நிலைய உணவகத்தில் திடீர் தீ

மராட்டிய மாநிலத்தில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் பாந்த்ரா ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் உணவகம் அமைந்துள்ளது. இன்று அதிகாலையில் மின்சார ரெயிலுக்காக குறைந்த அளவில் பயணிகள் காத்திருந்தனர்.

அப்போது திடீரென உணவகத்தில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த உணவக ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து ரெயில் நிலைய ஊழியர்கள் சேர்ந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக, ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், பாந்த்ரா ரெயில் நிலையத்தில் உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் கொடுத்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.