கோப்புப்படம் 
செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பூசிகள் வைக்கப்பட்டிருந்த சுகாதார அலுவலகத்தில் தீ விபத்து

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள பராசத் நகரில் மாவட்ட சுகாதார துணை தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகம் உள்ளது.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள பராசத் நகரில் மாவட்ட சுகாதார துணை தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகம் உள்ளது. இங்கு ஏராளமான கொரோனா தடுப்பூசிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று காலை இந்த சுகாதார அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொளுந்துவிட்டு எரிந்த தீ, அலுவலகம் முழுவதும் பரவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 12 பேர் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் இழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

அதேசமயம் சுகாதார அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளின் நிலைமை என்ன என்பது குறித்து தகவல்கள் இல்லை. அதேசமயம் தடுப்பூசிகளின் நிலைமை மற்றும் சேதத்தின் அளவை மதிப்பீடு செய்து வருவதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.