வேலாயுதபாளையம்:
கரூர் மாவட்டம், நடையனூர் அருகே உள்ள பேச்சிப்பாறையில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. அருகில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று குப்பை குவியலில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (45) வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.