செய்திகள்

செம்பரம்பாக்கத்தில் ரப்பர் கம்பெனியில் தீ விபத்து

செம்பரம்பாக்கத்தில் ரப்பர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

பூந்தமல்லி:

செம்பரம்பாக்கம் லட்சுமி புரத்தில் ரப்பர் கம்பெனி நடத்தி வருபவர் தாஜிதீன். நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் கம்பெனியை மூடி சென்று விட்டனர்.

நள்ளிரவு திடீரென கம்பெனியின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென முழுவதும் பரவியது.

தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, இருங்காட்டு கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் கம்பெனியில் இருந்த பொருட்கள், எந்திரங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.