குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, படேல் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல், கடந்த 11ம் தேதி அகமதாபாத்தின் போபால் பகுதியில் பேரணி சென்றார்.
அப்போது அவருடன் 50-க்கு மேற்பட்டோர் பைக்குகளில் பேரணியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி ஹர்திக்படேல் மீது அகமதாபாத் போலீசார் இன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அகமதாபாத்தில் உள்ள போபால் பகுதியில் கடந்த 11-ம் தேதி ஹர்திக் படேல் தலைமையில் பேரணி நடந்தது. ஆனால் அதற்கான அனுமதியை போலீசார் வழங்கவில்லை. அதையும்மீறி, படேல் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் பேரணி சென்றுள்ளார். அவருடன் 50க்கு மேற்பட்டோர் பைக்குகளில் ஊர்வலமாக சென்றுள்ளனர். எனவே அவர்கள் மீது அகமதாபாத் காவல் நிலையத்தில் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.