ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் யாத்திரை இன்றுடன் நிறைவடையும் நிலையில் சுமார் 2.60 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
40 நாட்கள் யாத்திரை இன்றுடன் முடிவடையும் நிலையில், இதுவரை சுமார் 2.60 லட்சம் யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல், விபத்து மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை 40-க்கும் மேற்பட்ட
யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.