செய்திகள்

டெல்லி கவர்னர் மாளிகையில் கெஜ்ரிவால் 5-வது நாளாக போராட்டம்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம் கவர்னர் மாளிகையில் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. #KejriwalProtest #ArvindKejriwal

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் ரே‌ஷன் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ந் தேதி கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் செய்ய கவர்னர் மாளிகைக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க கவர்னர் அனுமதி தரவில்லை.

இதனால் கவர்னர் மாளிகையில் உள்ள வரவேற்பு அரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கவர்னர் சந்திக்கும் வரை அங்கிருந்து செல்லபோவதில்லை என்று கூறி உள்ளார். அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், சோபால் ராய் ஆகியோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 5-வது நாளாக கவர்னர் மாளிகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது.

அவருக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது. அங்கேயே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டு சோபாவில் இரவு தூங்கி வருகிறார்.

ஆனால் இதுவரை அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னர் அனில் பைஜால் நேரம் ஒதுக்கவில்லை. #KejriwalProtest   #ArvindKejriwal