செய்திகள்

கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டார். #FidelCastroSon

கியூபா புரட்சியாளரும் கியூபாவை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்டோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட்(வயது 68).  இவரது முகத்தோற்றம் தந்தை பிடல் காஸ்ட்ரோவைப் போலவே இருந்ததால், பிடலிடோ என்று அழைக்கப்பட்டார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட்,  கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும்,  கியூபா அறிவியல் அகாடமியின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 68 வயதான டயஸ் பலார்ட், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருந்தபடியே சிகிச்சையை தொடர்ந்தார். ஆனாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக, விரக்தி அடைந்த அவர் இன்று (உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை கியூப அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.