செய்திகள்

கேரளாவில் ஜெயிலுக்குள் பெண் கைதி தூக்குபோட்டு தற்கொலை

கேரளாவில் கள்ளக்காதலுக்காக குடும்பத்தினரை கொன்ற பெண் ஜெயிலுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் பினராய் பகுதியை சேர்ந்த சவுமியா (வயது 28) . இவர் கள்ளக்காதலுக்காக பெற்றோர் மற்றும் குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

கைதான சவுமியா, கண்ணூர் ஜெயிலில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று இவர் நீண்ட நேரமாக அறைக்கு வரவில்லை.

சக கைதிகள் அவர் ஜெயில் அறைக்குள் வரவில்லை எனக்கூறியதை தொடர்ந்து ஜெயில் ஊழியர்கள் அவரை தேடினர்.

அப்போது ஜெயில் வளாகத்தில் உள்ள முந்திரி மரத்தில் சவுமியா தூக்குபோட்டு இறந்து கிடப்பதை கண்டனர். உடனே அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சவுமியா ஜெயில் அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. நான் நிரபராதி. யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால் என் மீது வீண் பழி கூறி கைது செய்துள்ளனர். எனவே தற்கொலை செய்கிறேன் என்று எழுதி இருந்தார்.

இதற்கிடையே சவுமியா இறந்து அவரது உடலை பல மணிநேரம் கடந்த பிறகே ஜெயில் ஊழியர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.இதுதொடர்பாக ஜெயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

சவுமியாவுக்கு தற்கொலை செய்ய சககைதியின் சேலை கிடைத்து எப்படி? என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #tamilnews