செய்திகள்

மதுரையில் பானைக்குள் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை பலி

தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.

மாலை மலர்

மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் தேவசேனா (வயது1½). நேற்று தேவசேனா வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் நிரம்பிய பானையில் கைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவரது தாயார் வெளியே சென்றதாக தெரிகிறது.

இந்த நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த தேவசேனா திடீரென்று தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாயார் மகளை மீட்டார். அப்போது தேவசேனா சரியாக மூச்சுவிட முடியாமல் திணறினாள்.

உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி தேவசேனா பரிதாபமாக இறந்தாள்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.