மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலியா ஸ்ரீவஸ்தவா 
செய்திகள்

இந்திய உணவு கழகத்தில் இருந்து மாநிலங்களுக்கு 22 லட்சம் டன் உணவு தானியங்கள் விடுவிப்பு

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து 22 லட்சம் டன்களுக்கு உணவு தானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணைச்செயலாளர் தெரிவித்தார்.

புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்கின்றன.

இதையொட்டி மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலியா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரியின் காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ், 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு தொடரும்.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக 13-ந்தேதி வரையில் இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22 லட்சம் டன்களுக்கு அதிகமான உணவு தானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.