புதுடெல்லி:
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்கின்றன.
இதையொட்டி மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலியா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதம மந்திரியின் காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ், 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு தொடரும்.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக 13-ந்தேதி வரையில் இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22 லட்சம் டன்களுக்கு அதிகமான உணவு தானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.