செய்திகள்

முகநூலில் த.வெள்ளையன் பற்றி அவதூறு: தென்சென்னை வணிகர் சங்க பேரவை சார்பில் புகார் மனு

த.வெள்ளையன் பற்றி வாட்ஸ்-அப், முகநூல் வாயிலாக அவதூறு தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்க பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை :

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தென்சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் ஏராளமான வணிகர் சங்க பிரமுகர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் த.பத்மநாபன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா மீது கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த வழக்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனின் தூண்டுதலின் பேரில் போடப்பட்டு உள்ளதாகவும், அவரது தூண்டுதலின் பேரில்தான் த.பத்மநாபன் புகார் மனு கொடுத்ததாகவும் வாட்ஸ்-அப், முகநூல் வாயிலாகவும் அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள். த.வெள்ளையன் பற்றி இது போன்று அவதூறு தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.