செய்திகள்

ஆம்பூரில் முதியவர் அடித்துக் கொலை: தந்தை-மகன் கைது

ஆம்பூரில் முதியவரை அடித்துக் கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது பக்கத்து வீட்டுக்காரர் மணி (59). ஓய்வுப்பெற்ற வங்கி ஊழியர். இருவரும் வீடு கட்டி வருகிறார்கள். இதற்காக, மணல், செங்கற்களை வீடு முன்பு அருகருகே குவித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் செங்கல், மணல் குறைந்த தகராறில் இருத்தரப்பினரும் நேற்று மதியம் மோதிக் கொண்டனர். அப்போது மணி தனது மகன் விஜயகுமாருடன் (39) சேர்ந்து முதியவர் ராமசாமியை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த ராமசாமி சுருண்டு விழுந்தார். ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து மணி மற்றும் அவருடைய மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.