செய்திகள்

திருவாரூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு 7 ஆண்டு சிறை

திருவாரூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கலைமதி உத்தரவிட்டார்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் அருகே கொரடாச்சேரி பெருமாளகரம் பகுதியில் வசித்துவந்தவர் முருகையன் (65). இவரது மகன் சசிக்குமார் (34). முருகையன் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த மரங்களின் கிளைகள் பக்கத்து வீட்டில் படர்ந்திருந்ததால் அதனை வெட்டிவிடுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் முருகையன் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மகன் சசிக்குமார் மரத்தின் அனைத்து கிளைகளையும் வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. முருகையன் மாலையில் வீடு திரும்பியபோது இதுகுறித்து சசிக்குமாரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிக்குமார் மண் வெட்டியால் தந்தை முருகையனை சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்த முருகையன் சம்பவயிடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி விசாரணையின் போது சசிக்குமாருக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கலைமதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜாமீனில் வந்திருந்த சசிக்குமாரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.