ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அதாங்பூர் கிராமத்தை சேர்ந்த முகுந்த் டோரா என்பவரது 7 வயது மகள் பபிதாவை காணவில்லை. எனவே அவளை அவர் தேடி வந்தார். இந்த நிலையில் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அவளது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது.
அவளது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்சை போலீசார் ஏற்பாடு செய்யவில்லை. புயல் மற்றும் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளது. அதை காரணம் காட்டி பிரேத பரிசோதனைக்காக இறந்த பபிதாவின் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும்படி தெரிவித்தனர்.
ஏழையான முகுந்த் டோராவினால் ஆம்புலன்சோ, வேறு வாகனமோ ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே மகளின் பிணத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு கட்டி தோளில் சுமந்தபடி 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றார்.
வழியில் லட்சமிபூரில் அவரை வழிமறித்து நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார். அதன் பின்னர் போலீசார் ஒரு ஆட்டோவை பிடித்து அதன் மூலம் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் ஒடிசாவில் புயல் பாதித்த கஜபதி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம் தனது மகள் உடலை 8 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இச்சம்பவம் வேனை அளிக்கிறது என்றார்.