செய்திகள்

தந்தையை தாக்கி கத்திமுனையில் இளம்பெண் கடத்தல்

வெம்பாக்கத்தில் தந்தையை தாக்கி கத்தி முனையில் இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அருகே உள்ள சோதியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி (19). சம்பவத்தன்று பச்சையப்பன் தனது மகள் மகேஸ்வரியை காஞ்சிபுரத்திற்கு பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

சோதியம்பாக்கம் கோழிபண்ணை அருகே சென்றபோது எதிர காரில் வந்த 3 நபர்கள் பைக்கை மறித்து பச்சையப்பனை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். பின்னர் மகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

இது குறித்து பச்சையப்பன் தூசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.