செய்திகள்

ஆருஷி கொலை: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் மகள் ஆருஷி தல்வாரும், வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் கடந்த 2008ம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வாதப் பிரதிவாதங்கள் புதன்கிழமை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் பெற்றோர்தானா? என்பது இன்று தெரியவரும்.

2013-ம் ஆண்டு முதல் ஆருஷியின் பெற்றோர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.