கோப்புபடம் 
செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

பயிர் கடன் வாங்க சுற்றியிருக்கும் நான்கைந்து வங்கியில் தடையில்லா சான்று வாங்க வேண்டும். தலைமை கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்.

மாலை மலர்

திருப்பூர்:

விவசாயிகளின் பயிர் சாகுபடிக்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இருப்பினும் கடனை பெறுவதில் விவசாயிகள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பயிர்க்கடன் பெறுவது சிம்ம சொப்பனமாகிவிட்டது என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர் பற்றிய விவரம் அடங்கலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அடங்கலில் கடந்த காலத்தில் சாகுபடி செய்த பயிர் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும்.

வி.ஏ.ஓ., ஒருவரால் அனைத்து இடங்களுக்கும் சென்று நடப்பு பருவ பயிரை பதிவு செய்வது கடினம். பயிர் கடன் வாங்க சுற்றியிருக்கும் நான்கைந்து வங்கியில் தடையில்லா சான்று வாங்க வேண்டும். தலைமை கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்.

சிட்டா அடங்கல், வி.ஏ.ஓ., சான்று வாங்க வேண்டும். ஜாமீன்தாரர் தயார் செய்ய வேண்டும். அவர் எந்த கடனும் நிலுவையில் வைத்திருக்கக்கூடாது. சிறு, குறு விவசாயி சான்று வாங்க வேண்டும். அது 6 மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். 

இவற்றை முடித்து பயிர் கடன் வாங்குவதற்குள் பயிர் அறுவடையே முடிந்து விடுகிறது. நடப்பு பருவத்தில் உள்ள பயிரை அடங்கலில் சேர்க்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.