பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி துணை மின் நிலைய வளாகத்தில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் விவசாயிகள் தக்கல் முறையில் மின் இணைப்பு பெற காசோலைகளுடன் விண்ணப்பம் அளிக்க வந்து இருந்தனர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் 60 விவசாயிகளிடம் மட்டும் விண்ணப்பத்தை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.
தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். #tamilnews