பாகூர்:
விழுப்புரம் மாவட்டம் சாமியார் பேட்டை ஆங்கூர் மதுரா கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 58). விவசாயி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு சமூக இயக்கம் நடத்திய கண் சிகிச்சை முகாமில் வேலாயுதம் கண் பரிசோதனை செய்தார்.
அப்போது அவருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக வேலாயுதம் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலாயுதம் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த நிலையில் வேலாயுதத்தின் மகன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து வேலாயுதத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.