செய்திகள்

நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள்

மகாராஷ்டிராவில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MaharashtraFarmers #SugarFactories

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் சதாரா, சங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் கடத்தி உள்ளன. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிலுவைத் தொகை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சதாரா மாவட்டம் கராத் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு திரண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆலையின் அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் சில முக்கியமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் பர்னிச்சர்கள் கருகின.

இதேபோல் நேற்று காலை, சங்லி மாவட்டம் வால்வா பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளது.

கரும்புக்கு நியாயமான விலை வழங்கக்கோரி கோலாப்பூரின் ஷிரோல் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையின் அலுவலகத்தை விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MaharashtraFarmers #SugarFactories

SCROLL FOR NEXT