செய்திகள்

சாமல்பட்டி விவசாயி கொலை வழக்கில் கணவன் - மனைவி கைது

சாமல்பட்டி விவசாயி கொலை வழக்கில் கணவன் - மனைவியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி கிராமத்தில் கடந்த 22-ந்தேதி அன்று கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் இருதரப்பினரிடைய ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விவசாயி பரசுராமன் (வயது 38) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக 19 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து ஜிம்மோகன் (37), வெற்றிவேல் (27), வேடியப்பன் (43), மேட்டூரை சேர்ந்த கோபிநாத் (43), சாமல்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்த விஜய் (26), வேடியப்பன் (24) மற்றும் வேல்முருகன் (23) ஆகிய 7 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்கிற கன்னுக்குட்டியான் (25) என்பவரை திருப்பூரில் கைது செய்தனர். 

மேலும் அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (24) என்பவரை வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். தற்போது சென்னையில் வைத்து சாமல்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்த முனியப்பன் (39) அவரது மனைவி மணி (32) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேதோட்டம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (24) என்ற வாலிபர் நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார். தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சாமல்பட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.