கைதான பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் 
செய்திகள்

சென்னையை கலக்கிய பிரபல ரவுடி கைது

சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த ராதாகிருஷ்ணன் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கோவை:

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(34). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளன.

சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த ராதாகிருஷ்ணனை கைது செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டனர். இதை தெரிந்து கொண்ட ராதாகிருஷ்ணன் சென்னையில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையடுத்து சென்னை ஒருங்கிணைந்த குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் ரவுடி ராதாகிருஷ்ணனை ரகசியமாக தேடி வந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அவரது படத்தை அனுப்பி வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ரவுடி ராதாகிருஷ்ணனுக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்ற ராதாகிருஷ்ணனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை சிங்காநல்லூர் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ராதாகிருஷ்ணனை சென்னைக்கு அழைத்து செல்ல அரும்பாக்கம் போலீசார் கோவை வந்து கொண்டிருக்கிறார்கள். கோவையில் ஆஸ்பத்திரியில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.