செய்திகள்

மயிலம் அருகே குடும்பத்தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

குடும்பத்தகராறில் வாலிபர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கள்ளக் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). கூலி தொழிலாளி.

இவருக்கும், மயிலம் அருகே உள்ள பாதிராபுலியூரைச் சேர்ந்த வனிதா (30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் பாதிராப்புலியூரில் உள்ள மாமியார் வீட்டில் மணிகண்டன் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும்  வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் மணிகண்டன் வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews