செய்திகள்

மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி - கலெக்டர் வழங்கினார்

மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். #InnocentDivya #FinancialAssistance

மாலை மலர்

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர். இவரது மனைவி ரோஷிணி. இவர்களுடைய மகன்கள் இமான் அகஸ்டின் (வயது 18), விபின். இதில் இமான் அகஸ்டின் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி இருந்து பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி விடுமுறையில் ஊட்டிக்கு வந்த இமான் அகஸ்டின் பிரார்த்தனை செய்வதற்காக ஆலயத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது, மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உயிரிழந்த இமான் அகஸ்டின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., சாந்தி ராமு எம்.எல்.ஏ., ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.