கோப்பு படம் 
செய்திகள்

திருப்பூரில் தொழிலாளி கொலையில் போலி நிருபர் கைது

திருப்பூரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி நிருபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (37). பனியன் தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த பாத்திமாகனி என்பவரிடம் ஒன்றரை பவுன் நகையை வாங்கி அடகு வைத்தார்.

மேலும் தான் வேலை செய்யும் இடம் அருகே வசித்து வரும் நாகராஜ் என்பவரிடமும் 10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இருவரிடமும் பணத்தை திருப்பி கொடுக்காமல் சுரேஷ் காலதாமதப்படுத்தி வந்தார்.

இதனால் பாத்திமா கனியின் கணவர் சாகுல் அமீது, உறவினர் அப்துல் காதர்சேட் ரூபைதீன் மற்றும் நாகராஜ் ஆகியோர் சேர்ந்து சுரேசை தாக்கினார்கள். இதில் அவர் இறந்தார்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சாகுல் அமீதை கைது செய்தனர். மற்ற 3 பேர் தலைமறைவானார்கள்.

அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நாகராஜ், அப்துல் காதர் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

தலைமறைவாக இருந்த எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சேட் ரூபைதீனும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி நிருபர் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 3 அடையாள அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.