பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் அறிவிக்கும் முன்னரே இரு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. சார்பில் அமித்ஷாவும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களிடையே குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய போலி பட்டியலை சிலர் சமூக வலைதளங்களில் உலவ விடுகின்றனர் என முதல் மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் போலி பட்டியலை உலவ விட்டுள்ளனர். யாரும் அந்த போலி பட்டியலை நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews