ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி அதிகாரி 
செய்திகள்

ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

ஜெ.தீபாவின் வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி, போலீசார் விசாரணையின்போது தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Deepa

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் தீபா, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று ஒரு நபர் வந்துள்ளார். குடியிருப்பு காவலாளியிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மற்ற அதிகாரிகள் வந்ததும் சோதனையை தொடங்க உள்ளதாக கூறி அடையாள அட்டையை காட்டியதால், அவரை தீபாவின் கணவர் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார்.

இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்த வந்திருப்பதாக ஜெ. தீபாவின் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து, அந்த நபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். உடனே தீபாவின் வழக்கறிஞர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையின்போதும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அந்த நபர், அங்கிருந்து நைசாக நழுவியிருக்கிறார்.

SCROLL FOR NEXT