டெல்லி உயர்நிலைக் கல்வி வாரியம் என்ற பெயரில் போலியான கல்வி நிறுவனம் ஒன்று இயங்கி வந்த நிலையில், இந்நிறுவனமானது டெல்லி போலீசாரால் இன்று மூடப்பட்டது. அதன் தலைவர் சிவ் பிரசாத் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், நிறுவனத்திலிருந்து 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி வாரியங்களின் 15 ஆயிரம் போலி மதிப்பெண் சான்றிதழ்கள், ரப்பர் ஸ்டம்ப், பிரிண்டர், கணினி உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உயர்நிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'டெல்லி உயர்நிலைக் கல்வி வாரியம் இந்திய அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். எங்கள் கல்வி வாரியம் அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கீழே செயல்பட்டு வருகிறது' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையான கல்வி வாரியம் பெயரில் போலியான நிறுவனம் செயல்பட்டு வந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.