பேஸ்புக் 
செய்திகள்

அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது - பேஸ்புக் நிறுவனம்

அரசியல் விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது. ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சான் பிரான்சிஸ்கோ:

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. விளம்பரங்கள் என்ற பெயரில் பொய்பிரசாரம் செய்வதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க பாராளுமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், அரசியல் விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது. ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. அதேசமயம் அரசியல் விளம்பர கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முடியாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் ரோப் லேதர்ன் கூறுகையில், விளம்பர கொள்கைகளில் முழுமையாக மாற்றம் கொண்டு வருவதற்கு பதிலாக, பிரசாரங்களுக்கான விளம்பரங்களை பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தி தரம் பிரித்து வழங்க முடிவு செய்துள்ளோம். பல பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று, பிரசாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் சார்ந்த விளம்பரங்களை வெகுவாக குறைக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.