செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் பதவி விலகல்

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கிவரும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான நிர்வாக இயக்குநரான உமங் பேடி தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

உலகளாவிய நட்பு எல்லையை சுருக்கி உள்ளங்கை அளவில் கைபேசிக்குள் அடக்கிய பெருமை சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் உள்ள பேஸ்புக்கை சேரும். உலகளாவிய அளவில் 131 கோடி மக்கள் பேஸ்புக் மூலம் தங்களது வாழ்வின் சுக-துக்கங்களை பேஸ்புக் மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

21 கோடி பயனாளிகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மாதந்தோறும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அடோப் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிவந்த உமங் பேடி என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், நாளொரு மேனி - பொழுதொரு வண்ணமாக வளர்ச்சி அடைந்துவரும் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலக உமங் பேடி தீர்மானித்துள்ளார். அவரை வரும் டிசம்பர் மாத இறுதியில் விடுவிக்க பேஸ்புக் நிறுவன தலைமை விருப்பம் தெரிவித்துள்ளது.