நரோட்டம் மிஸ்ரா 
செய்திகள்

முகக்கவசம் தான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி - பாஜக மந்திரி பேச்சு

முகக்கவசம் தான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி என மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை மந்திரியும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

போபால்:

உலகையே உலுக்கி லட்சக்கணக்கான உயிர்களை வாங்கிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

முகக்கவசம் அணிதலும், சமூக இடைவெளியை கடைபிடித்தலும் கொரோனா பரவும் வேகத்தை குறைக்கும் வழிமுறைகளாக கருதப்படுகிறது.

இந்நிலையில், முகக்கவசம் தான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி என பாஜக மந்திரி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்மந்தியாக கொண்டு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் உள்துறைமந்திரியாக பாஜகவை சேர்ந்த நரோட்டம் மிஸ்ரா செயல்பட்டு வருகிறது.

அவர் நேற்று போபாலில் உள்ள நியூ மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு முக்கவசம் விநியோகம் செய்தார். அப்போது பேசிய மிஸ்ரா, ’முகக்கவசம் தான் இப்போதைக்கு கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் அந்த வைரசுக்கான தடுப்பூசி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்’ என்றார்.

முன்னதாக கடந்த 23 ஆம் தேதி நரோட்டம் மிஸ்ரா இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் முகக்கவசம் அணியவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நான் முகக்கவசம் அணியமாட்டேன்... அதனால் என்ன?’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

பின்னர் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையடுத்து, தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.