செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் இலக்கு- 8 முதல் 10 வயது சிறுவர்களை குறிவைக்கும் மத்திய மந்திரி

2024 மற்றும் 2028 ஒலிம்பிக்கிற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் 8 வயது முதல் 10 வயது சிறுவர்களை குறிவைக்கிறார் மத்திய மந்திரி. #KheloIndia

மாலை மலர்

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான ரத்தோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்தவர். இவர் தற்போது மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக உள்ளார். விளையாட்டுத் துறை மந்திரியாக பதவி ஏற்றதும், விளையாட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

கட்டமைப்புகளை உருவாக்கி சிறந்த வீரர்களை உருவாக்குவதே இவரது முதன்மையான கடமையாகும். இளம் வீரர்களை உருவாக்குவதற்காக கேலோ இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனடைந்த அனிஷ் பன்வாலா, மானு பாகர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

கேலோ இந்தியா சார்பில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடர் சிறப்பாக நடைபெற்றது. இதனால் ரத்தோர் புதிய பயிற்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

2024 மற்றும் 2028 ஒலிம்பிக் தொடரை மனிதில் வைத்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்றும் கூறும் அவர், மேலும் இதுகுறித்து கூறுகையில் ‘‘கேலோ இந்தியாவின் 16 வயது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு பிறகு, நாங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

இந்த வருடம் நாங்கள் 8 முதல் 10 வயதிலான திறமையான குழந்தைகளை கண்டறியும் பணியில் சென்று கொண்டிருக்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள திறமையான குழந்தைகளை கண்டறிவோம். ஒருகோடி குழந்தைகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் திறமையான குழந்தைகளை தேர்வு செய்வதுதான் எங்கது டார்கெட். இவர்களுக்கு டிஎன்ஏ டெஸ்ட் மற்றும் IQ டெஸ்ட் நடத்தப்பட்டு 2024 மற்றும் 2028 ஒலிம்பிக்கிற்கான சிறந்தவர்களை கண்டறிவோம்’’ என்றார்.