செய்திகள்

சுஷ்மா சுவராஜ் வங்காளதேசத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம்: வெளியுறவு துறை அமைச்சகம்

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்லவுள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்லவுள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர், தனது நாட்டின்  வளர்ச்சிக்கு இந்தியா முதலீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அங்கு சுற்றுப்பயணம் செய்தார்.  

இந்நிலையில், வெளியுறவு துறை மந்திரியான சுஷ்மா சுவராஜ் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்லவுள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டாவது முறையாக வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மேலும் வலுப்படும் வகையில் அவரது பயணம் அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் தனது சுற்றுப்பயணத்தில் வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளார். அப்போது, இருதரப்பு உறவுகள், ரோஹிங்கியா அகதிகள் விஷயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்படும். மேலும், வங்காளதேசத்தின் வெளியுறவு துறை மந்திரி அப்துல் ஹாசன் மஹ்மது அலியையும் சந்தித்து பேசவுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT