செய்திகள்

மாநில பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்ற நிபுணர் குழு அமைப்பு

சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்ற நிபுணர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

மாலை மலர்

உயர்கல்விக்கு செல்லவும், ஏற்ற வேலைவாய்ப்பை பெறவும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் இணைத்து கற்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் புதிதாக உருவாக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த ஆணையை தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மாநில பாடத்திட்டம் தரமானதாகவும், மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்திற்கு இணையாகவும் மாற்ற வேண்டியுள்ளது என்று தெரிவித்ததோடு, இதற்கான நிபுணர் குழுவை பரிந்துரை செய்து அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதனை அரசு நன்கு ஆய்வு செய்து, சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்ற நிபுணர் குழுவை அமைத்து ஆணையிட்டு உள்ளது. இதன்படி, இந்த குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் செயல்படுவார்.

அந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளியும், உறுப்பினர்களாக தரமணி கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ஆர்.ராமானுஜம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கு.ராமசாமி, சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், சென்னை புதுக்கல்லூரி முன்னாள் துறைத்தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கல்வியாளர் கலாவிஜயகுமார், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.