உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திட முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உடல்சார்ந்த பயிற்சிகள் பள்ளிகள் அளவில் முதலில் கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகிறது. அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு 2 பாடவேளைகள் மட்டும் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மாணவ-மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல்சார்ந்த பயிற்சிகள் கொண்டுவரப்படும் பட்சத்தில் பாடச்சுமையின் காரணமான மனஅழுத்தம் குறைந்து கற்றல்திறன் மேம்படும் நிலை ஏற்படும். இதன் மூலம் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கக்கூடிய உடற்தகுதி மற்றும் ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படும்.
இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். உடல்சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, நடனம், யோகா, உடற்பயிற்சி ஆகிய அனைத்து அம்சங்களும் இடம்பெற வேண்டும்.
மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.