செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் வழிபாடு - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி வந்தார்

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்வதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று மாலை திருப்பதி வந்தடைந்தார்.

திருப்பதி:

இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மறுநாள் 10-12-2014 அன்று திருப்பதி வந்து ஏழுமலையான் சாமியை தரிசனம் செய்து சென்றார்.

அதன் பின்னர் சுமார் மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று மாலை திருப்பதி வந்தடைந்தார். திருமலையில் கார் மூலம் திருமலைக்கு சென்ற அவர் இன்றிரவு அங்கு தங்கி ஒய்வு எடுக்கிறார்.

நாளை காலை சுப்ரபாத வழிப்பாட்டின்போது ஏழுமலையானை அவர் தரிசனம் செய்கிறார் என திருப்பதி - திருமலா தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் புதுக்கட்சி அதிகமான இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் அவர் திருப்பதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது வருகையையொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.