செய்திகள்

எத்தியோப்பியாவில் பிரதமர் ராஜினாமா செய்துள்ளதையடுத்து அவசரநிலை பிரகடனம்

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ethiopia #stateofemergency

மாலை மலர்

எத்தியோப்பியா, ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும். அடிஸ் அபாபா இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

அந்நாட்டின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென் கடந்த 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் வளர்ச்சி நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அந்நாட்டின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கபடும்வரை ஐலிமரியாம் தேசாலென் பிரதமர் பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டிருந்தது.