செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால்தான் டெங்கு-பன்றி காய்ச்சல் வருகிறது: ஈஸ்வரன்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுவதாக ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #DengueFever

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொ.ம.தே.க. ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தகுந்த நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அது சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஐயம் இன்றைக்கு மக்களிடையே இருக்கிறது.

ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் மழையை காரணம் காட்டி ஒத்தி வைத்திருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓராண்டு ஆகப்போகிறது ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதி மக்கள் அரசால் ஏமாற்றப்படுகிறார்கள் .

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாத அளவுக்கு இன்றைக்கு நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையிலே நாம் ஏமாற்றப்படுகிறோம்.

உள்ளாட்சி தேர்தலை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும், 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நிரந்தரமான தீர்வு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. அடுத்த வருடம் என்ன நடக்கும், சிவகாசி தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் இன்றைக்கு தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழக்கு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததற்காக 2,400 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது

பவானி ஆற்றில் கலக்கின்றன சாயக்கழிவு தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #DengueFever