செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்ட என்ஜின்

ஈரோடு ரெயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. . #Train

ஈரோடு:

ஈரோடு வழியாக பெங்களூருக்கு ஆயில் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

அதே நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு தண்ட வாளத்தில் குட்ஷெட்டில் இருந்து பணிமனை நோக்கி ஒரு ரெயல் என்ஜின் இயக்கப்பட்டது.

எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதியது. இதில் பணிமனை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் தடம் புரண்டது. இதில் அந்த என்ஜினில் உள்ள ஏணிப்படிகள் உடைந்து சேதமடைந்தன.

என்ஜினின் வலதுபுற மேல் பகுதி சேதம் அடைந்தது. ஆனால் பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

ஆயிலை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரெயில் வேகமாக மோதி இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்துவதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி என்னும் நவீன கருவி துணையுடன் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT