அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருபவர்களை எர்ணாவூர் நாராயணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்- எர்ணாவூர் நாராயணன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று திருச்செந்தூரில் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். #Thoothukudifiring

மாலை மலர்

திருச்செந்தூர்:

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது. ஆலை நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றால் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்படும். எனவே அரசு சட்டசபையில் ஆலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிரந்தரமாக மூடவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அப்பாவி பொதுமக்களை சமூக விரோத கும்பல் என கூறி போலீசார் கைது செய்வதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்

இந்த ஆலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது வெறும் கண்துடைப்பு ஆகும். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க 2 முறை அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை எனக்கு அனுமதி இல்லை.

பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.யில் சேர்க்க வேண்டும். அப்போது தான் விலை குறையும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring