எரியோடு:
திண்டுக்கல் செட்டி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது54). இவர் எரியோடு பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்தார். திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அருகே கரும்பாறை குளம் உள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இருந்து உபரிநீர் கரும்பாறை குளத்திற்கு செல்கிறது. வழக்கமாக நடராஜன் மாலை நேரத்தில் இந்த குளத்தில் துணி துவைத்து குளித்து விட்டு வருவார்.
நேற்று குளிக்க சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் குளத்திற்கு சென்று பார்த்த போது அங்கு நடராஜனின் உடைகள் இருந்துள்ளது.
எனவே குளத்தில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்த நடராஜனை தேடினர்.
இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் இன்று காலை நடராஜனை பிணமாக மீட்டனர். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜன் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.