லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
464 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து திணறியது. வெற்றிக்கு மேலும் 406 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது.
இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது. கடைசி நாளான இன்று இந்திய அணி மேலும் 406 ரன்களை எடுப்பது என்பது மிகவும் சவாலானது.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். எனவே, தோல்வியை தவிர்க்க ‘டிரா’ செய்ய கடுமையாக போராடுவார்கள். ஆனால் அது மிகவும் கடினமானதே.
இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது. 3-வது டெஸ்டில் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.