மணக்கோலத்தில் ஆன்லைன் தேர்வை எழுதிய என்ஜினீயரிங் மாணவி 
செய்திகள்

திருமண கோலத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய என்ஜினீயரிங் மாணவி

அருமனை அருகே திருமணம் முடிந்த பின்னர் மணக்கோலத்தில் வீட்டில் இருந்தபடி என்ஜினீயரிங் மாணவி ஆஷா ஆன்லைன் தேர்வை எழுதினார்.

மாலை மலர்

அருமனை:

அருமனை அருகே மாலைக்கோடு பகுதியை சேர்ந்த ஆஷா, ஓசூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்த அவர் வீட்டிலேயே இருந்தார். இதற்கிடையே அவருக்கும், அதே ஊரை சேர்ந்த அகில் ஜெ.விஜயன் என்பவருக்கும் ஆகஸ்டு 24-ந் தேதி (அதாவது நேற்று) திருமணம் நடைபெறுவதாக இரு வீட்டார் குடும்பத்தினர் பேசி முடிவெடுத்தனர்.

இந்தநிலையில் அந்த தேதியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிப்பவர்களுக்கு ஆன்லைன் தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத வேண்டிய நாளில், திருமண தேதி நடைபெறுவதாக இருந்ததால் மாணவி ஆஷா நெருக்கடிக்கு ஆளானார். பின்னர் திருமணத்தை காலையில் எளிமையாக நடத்தி விட்டு தேர்வு எழுதலாம் என ஆஷா முடிவெடுத்தார். மணப்பெண்ணின் முடிவுக்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலையில் ஆஷாவுக்கும், அகில் ஜெ.விஜயனுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் வீட்டில் இருந்தபடி ஆஷா ஆன்லைன் தேர்வை எழுதினார்.