என்ஜினீயரிங் கலந்தாய்வு (கோப்புப்படம்) 
செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

மாலை மலர்

சென்னை:

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதன்படி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது. இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 6-ந்தேதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு அந்தந்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விளையாட்டுப் பிரிவில் 1,409 பேரும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 149 பேரும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரிவில் 855 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர். அதன்பின்னர், வருகிற 8-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற இருக்கிறது.