பொறியியல் கலந்தாய்வு 
செய்திகள்

பொறியியல் 2வது கட்ட கலந்தாய்வு - சென்னையில் 28ந்தேதி தொடங்குகிறது

சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொறியியல் 2வது கட்ட கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 30-ந்தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

மாலை மலர்

சென்னை:

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதம் பெற்று வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் 3-வது சுற்றில் 33,167 மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. உத்தேச ஒதுக்கீடாக 26,318 இடங்கள் இன்று மாலை ஒதுக்கப்படுகிறது. இறுதி ஒதுக்கீடு நாளை (23-ந்தேதி) வழங்கப்படுகிறது.

உத்தேச 2-வது சுற்று ஒதுக்கீடு மற்றும் ஏற்கனவே முடிந்துள்ள 4 சுற்றுகள் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 47,850 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4-வது சுற்று சேர்க்கை 24-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி முடிகிறது.

இதற்கிடையில் பிளஸ்-2 உடனடி சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் சேர முடியாமல் இருந்த மாணவர்களுக்காக துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பொது கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இணைய தள வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். கடந்த 20-ந்தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. 24-ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம். 2-வது கட்ட கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 30-ந்தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இது நேர்முக கலந்தாய்வாக சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது:-

துணை கலந்தாய்வு 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. தரமணியில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவை இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். அசல் சான்றிதழ்களுடன் மாணவர்கள் வரவேண்டும். இதுபற்றி முழு விவரங்கள் tneaonline.in என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.