செய்திகள்

நடுவானில் பறக்கும்போது என்ஜின் செயலிழந்தது - அகமதாபாத்தில் அவசரமாக இறங்கிய விமானம்

மும்பையில் இருந்து லக்னோ நகருக்கு புறப்பட்டு சென்ற தனியார் விமானம் நடுவானில் பறக்கும்போது என்ஜின் செயலிழந்ததால் அகமதாபாத்தில் அவசரமாக தரை இறங்கியது.

மாலை மலர்

மும்பை:

ஏர் இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக ஏர்பஸ் விமானம் 186 பயணிகளுடன் இன்று காலை வழக்கம்போல் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி புறப்பட்டு சென்றது.

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் இரண்டாவது என்ஜின் திடீரென்று முற்றிலுமாக செயலிழந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமானி, காலை 9.38 மணியளவில் அருகாமையில் உள்ள அகமதாபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொண்டார்.

நிலைமையை விவரித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி அளிக்குமாறு கேட்டார். இதையடுத்து, அகமதாபாத் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இறங்கும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் ஓடுபாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக செய்யப்பட்டன.

சற்று நேரத்தில் அகமதாபாத் நகர விமான நிலைய வான் எல்லையை வட்டமிட்ட அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இரண்டாவது என்ஜின் முற்றிலுமாக செயலிழந்து கிடந்ததை உரிய நேரத்தில் விமானி கவனித்து, அவசர நடவடிக்கை எடுத்ததால் 186 பயணிகளும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews