புதுடெல்லி:
ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவரும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் பலகோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் ரெயில்வே மந்திரியாக இருந்த போது ஐ.ஆர்.டி.சி. ஓட்டல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தை தனது குடும்பத்தினர் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தியது. இதில் டெல்லியில் லாலு மகள் மிசா பாரதிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள பண்ணை வீடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு மிசா பாரதி, அவரது கணவர் ஆகியோர் சி.பி.ஐ. முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள மிசா பாரதியின் பண்ணை வீட்டை அமலாக்கப் பிரிவு முடக்கியது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.